ads

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கு பாரதியார் நினைவு பரிசு போட்டிகள்


நெல்லை

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு பாரதியார் நினைவு பரிசு போட்டிகள்  (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை டவுனில் நடக்கிறது.

பாரதியார் நினைவு போட்டிகள்

நெல்லை டவுன் பாரதியார் உலக பொதுசேவை நிதியம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கான 27–வது பாரதியார் நினைவு பரிசுப் போட்டி நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு டவுன் பாரதியார் தெருவில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. போட்டிகள் 4 பிரிவுகளாக நடத்தப்படுகின்றன.

போட்டி விவரம்

நடுநிலைப்பிரிவு 6, 7, 8–ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுதலை போரில் பாரதியின் பங்கு, பாரதியின் பாப்பா பாட்டு ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டியும், அவ்வையாரும் பாரதியும், பெண் அடிமை நீக்கியவர் பாரதி என்ற தலைப்புகளில் கட்டுரை போட்டியும் நடக்கிறது.

உயர்நிலைப்பிரிவு 9, 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு பாரதியின் பைந்தமிழ் பணி, பாரதியாரின் புதுமைப்பெண் என்ற தலைப்புகளில் பேச்சு போட்டியும், பாரதியின் தமிழ்பற்று, பாரதி கண்ட தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்புகளில் கட்டுரை போட்டியும் நடக்கிறது.

மேல்நிலைப்பிரிவு 11, 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு பாரதியின் பாஞ்சாலி சபதம், பாரதியின் சமூகப் பார்வை குறித்து பேச்சு போட்டியும், பாரதியின் தொலைநோக்கு பார்வை, பாரதியும் பாரதிதாசனும் என்ற தலைப்புகளில் கட்டுரை போட்டியும் நடத்தப்படுகிறது.

கல்லூரி பிரிவு கலை மற்றும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கு கண்ணன் பாட்டும் பாரதியும், பாரதியின் மனிதநேயம் என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், ஷெல்லியும் பாரதியும், புதுக்கவிதைக்கு வித்திட்டவர் பாரதி என்ற தலைப்களில் கட்டுரை போட்டியும் நடத்தப்படுகிறது. பேச்சுப் போட்டிக்கு 3 நிமிடமும், கட்டுரை போட்டிக்கு 1 மணி நேரமும் வழங்கப்படும்.

பரிசுகள்

பாட்டு போட்டி (4 பிரிவுகளில்) பாரதியார் பாடல்களை மட்டும் பாட வேண்டும். பாடும் போது இசைக் கருவிகள் பயன்படுத்தக் கூடாது. 3 நிமிடம் வழங்கப்படும்.

கவிதை போட்டி (மேல்நிலை, கல்லூரி பிரிவுகளுக்கு மட்டும்) போட்டி தொடங்கும் முன்பு தலைப்பு வழங்கப்படும். மரபு, புதுக்கவிதைகள் எழுதலாம். எழுதிய கவிதையை வாசிக்க வேண்டும். இதற்கு 30 நிமிடம் ஒதுக்கப்படும்.

பேச்சு, கட்டுரை போட்டிகள் மதியம் 1.30 மணிக்கும், பாட்டு, கவிதை போட்டிகள் மதியம் 2 மணிக்கும் நடைபெறும். போட்டிகளுக்கு மதியம் 1 மணிக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலை 4.30 மணிக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.