ads

நாவலர் சோமசுந்தர பாரதியார்


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் (1879) பிறந்தார். இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிவந்த சுப்பிரமணிய பாரதிக்கு நண்பரானார். இருவரும் இணைந்து பல நூல்களைக் கற்றனர். பாடல்கள் இயற்றினர். அரண்மனைக்கு வந்திருந்த ஈழப்புலவர் ஒருவர், இவர்கள் இருவருக்கும் ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார்.

எட்டயபுரத்திலும், நெல்லை சிஎம்எஸ் கல்லூரி பள்ளியிலும் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பையும் முடித்தார்.

வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டே, முதுநிலை சட்டம் படித்து பட்டம் பெற்றார். சிறந்த வழக்கறிஞர் என்று புகழ்பெற்றார். ஆயிரக்கணக்கில் சம்பாதித்தவர் அதை விட்டுவிட்டு, வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் அவரது சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.

ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். நெல்லை, மதுரையில் காங்கிரஸ் கட்சி மாநாட்டைத் தலைமை ஏற்று நடத்தினார்.

‘என்னிடம் 2 சரக்கு கப்பலோடு, 3-வதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது’ என்று வ.உ.சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார். வ.உ.சி., சுப்பிரமணிய சிவா மீதான வழக்குகளில் அவர்களுக்காக வாதாடினார்.

காந்தியடிகளை முதன்முதலில் தமிழகத்துக்கு வரவழைத்து உரையாற்றச் செய்தார். தன் குடும்பத்தினரையும் விடுதலை இயக்கத்தில் பங்குபெறச் செய்தார். சுதந்திரப் போராட்டத்துக்கு நன்கொடையாக, குழந்தைகளின் நகைகளைக் கழற்றி காந்தியிடம் அளிக்கச் செய்தார். இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ்க் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். ‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’, ‘அழகு’, ‘சேரர் தாயமுறை’, ‘தமிழும் தமிழரும்’, ‘திருவள்ளுவர்’ உட்பட பல நூல்களையும், 5 ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கி யங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு, மொழி பெயர்ப்பு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதினார். ‘நான் கண்ட சுப்பிரமணிய பாரதி’ என்ற நூலை எழுதினார். மதுரை அடுத்த உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தொடக்கப்பள்ளியை நிறுவினார்.

இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி ஈழநாட்டுப் புலவர் மன்றம் ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. திருவள்ளுவர் கழகம் ‘கணக்காயர்’ என்ற பட்டத்தையும், அண்ணாமலை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கியது.

சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டவர். சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராக செயல்பட்டார். தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் அருந்தொண்டுகள் ஆற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 80 வயதில் (1959) மறைந்தார்




1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில்தான் மொழிவழி அடிப்படையில் தமிழ்த்தேசிய இனம் தன்னைத்தானே அடையாளங் கண்டது. அப்போராட்டத்தின் மூலமாக உருவான மொழிவழி மாகாணக் கோரிக்கையும், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கமும் அப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத் தலைவர்களால் திராவிடன், திராவிட நாடு என்று மடைமாற்றம் செய்யப்பட்டது.

  முதல் இந்தி எதிர்ப்புப் போரில் உருவான தமிழின அடையாளத்தை இழக்க சோமசுந்தர பாரதியாருக்கு மனம் வரவில்லை. பெரியார் உருவாக்கிய ஆரியத்திற்கு எதிர்வகை குறியீட்டுச் சொல்லாகிய திராவிடத்தை சோமசுந்தர பாரதியார் ஒப்புக் கொள்ள மறுத்தார். ஆரியர் x தமிழர் என்பதே அவரது கொள்கை நிலைப்பாடாகும்.

  1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் “தமிழர் கழகம்” எனும் அமைப்பை நிறுவினார். தமிழ்மொழி ஆக்கத்திற்கும், இந்தி எதிர்ப்புக்கும், தமிழர் முன்னேற்றத்திற்கும் வெவ்வேறு பெயர்களில் அமைக்கப் பெற்ற இயக்கத்தினர்களெல்லாம் தமிழர் கழகக் கிளைகளை ஆங்காங்கே அமைக்க வேண்டுமென்று பாரதியார் பேரழைப்புக் கொடுத்தார். பிறகு ‘தமிழர் கழகம்’ எனும் இதே பெயரில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் அமைப்பைக் கட்டிய போதும் அதன் தலைவராக பாரதியார் பொறுப்பு வகித்தார்.

  1942 இல் பெரியாரின் திசை மாறிப்போன ‘திராவிடநாடு திராவிடர்க்கே’ முழக்கம் காதைப் பிளந்து வந்த நிலையில், சி.பா.ஆதித்தனார் ‘தமிழ் இராச்சியக் கட்சி’யை உருவாக்கினார். அப்போது அதனை மனமுவந்து தொடங்கி வைத்தவரும் பாரதியார் என்பது நினைவு கூரத்தக்கது.

  நீதிக்கட்சியில் பெரியார், அண்ணா இருந்த போதும், தி.மு.க.வை அண்ணா உருவாக்கிய போதும் திராவிடம் குறித்தத் தமது மறுப்புக் கருத்தை பாரதியார் வெளிப்படுத்திய தருணங்கள் பல உண்டு.

  14.3.1943இல் சேலத்தில் நடந்த ‘கம்பராமாயண எரிப்புப் போர்’ உரையாடலின் இறுதிப் பகுதியில் பாரதியார் கூறுகிறார்: “தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்” என்று இடித்துரைத்தார்.

  1950ஆம் ஆண்டு மே மாதம் 27, 28 நாட்களில் கோவையில் தி.மு.க. சார்பில் ‘முத்தமிழ் மாநாடு’ நடைபெற்றது. அதில் மாநாட்டுத் திறப்பாளராக கலந்து கொண்ட பாரதியார் அவர்கள் மீண்டுமொரு முறை திராவிடத்தின் மீது குட்டு வைத்துப் பேசினார். அது வருமாறு: “இந்நாளில் பலர் திராவிடர், திராவிடர் என்றே சொல்லி வருகிறார்கள். தமிழ், தமிழர் என்று சொல்ல வெட்கப்படுகிறவன் தமிழனாயிருக்க முடியுமா? அவன் இரத்தத்திலே எப்படி தமிழ் இரத்தம் ஓடும்? இனியாவது தமிழ் தமிழர் என்று சொல்லுங்கள். தமிழருக்குத் தமிழரே பகைவர்” என்றார்.

பாரதியாருக்கும் ஒரு படி மேலே சென்று அம்மாநாட்டிலே தூய தமிழ்க் காவலர் கு.மு.அண்ணல் தங்கோ ‘திராவிடம்’ என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது என்று சொன்னாரே பார்க்கலாம். அண்ணாவோ பதைபதைத்துப் போனார். முத்தமிழ் மாநாடு திராவிடத்திற்கு விளக்கம் சொல்லும் மாநாடாக மாறிப் போனது.

1953ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ தமிழக எல்லைத் தற்காப்பு மாநாட்டை நடத்தினார். கருணாநிதி, கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதிதாசன், கா.அப்பாத்துரையார், தார்பிடோ சனார்த்தனம், திருக்குறள் முனுசாமி ஆகியோர் பங்கு கொண்ட மாநாட்டில் அதன் தலைவராகிய பாரதியார் “நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று” என்று பேசிய போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் கூட்டத்திலே பங்கு பெற்றவர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம் தவிர, மற்ற ஏனையோர் திராவிடச் சார்பாளர்கள் என்பதே உண்மையாகும்.

  திராவிட இயக்கத்தவரின் ஆரிய எதிர்ப்பில் உடன்பாடு கொண்டவராக இருந்த போதிலும், அந்த ஆரிய எதிர்ப்பையும் கூடத் தாம் தன்மதிப்பு இயக்கத்தால் கற்றுக் கொள்ள வில்லை என்பதை தெளிவுபடுத்திக் கூறவும் பாரதியார் துணிந்தார். அது வருமாறு:

  ஆரியருக்கு அடிமைப்படாத எண்ணம் எனக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது. தன்மதிப்பு இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இருந்தது. என்னுடைய 14 வயதில் திருமணம் நடைபெற்றது. என்னுடைய சிவநெறி வேறு. இன்று சைவப்பண்டிதர் கூறும் சைவமல்ல, உண்மையே எனக்குச் சிவம். எனக்குத் திருமணம் பார்ப்பனரை வைத்து செய்வதாகக் கூறினார்கள். சைவ ஆகமங்களின் படி பார்ப்பனர்கள் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. கோயில்களிலே அவர்கள் கொடி மரத்துக்கு அப்புறம் நுழையக் கூடாது. வந்தால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதால் அப்படிப்பட்ட சண்டாளர்களைக் கொண்டு திருமணம் செய்யாமல் சைவ குருக்களை வைத்துத் திருமணம் செய்தேன். எனது சிறிய வயதிலேயே எனக்கு அந்த நோக்கம் இருந்தது. தன்மதிப்பு இயக்கத்தாலோ, அண்ணாதுரையாலோ அந்த நோக்கம் எனக்கும் வரவில்லை. அது முதற்கொண்டு இதுவரை நான் தமிழருக்கு தன்மானம் வரவேண்டுமென்று உழைத்து வந்திருக்கின்றேன்.”

  பாரதியார் தமிழ் நூல்களிலே உள்ள ஆரியத்திற்கு வலுசேர்க்கும் கருத்துகளை புறந்தள்ள வேண்டுமென்று வற்புறுத்தும் அதே வேளையில் நல்ல கருத்துகள் இருக்கும்நேர்வில் போற்றிடவும் தயங்கக் கூடாது என்பார்.

  அண்ணா கம்ப இராமாயணத்தை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அதை வன்மையாகக் கண்டித்ததோடு ஒரு சிறந்த காவியத்தை எரிப்பது நல்லதன்று. அது தமிழ் நெறியன்று. ஆபாசக்கருத்துகளை எரிக்கச் செய்யப்படும் முயற்சிக்கு வேண்டுமானால் நான் துணை நிற்பேன். அருந்தமிழ் நூலை எரிப்பதால் ஆபாசக் கருத்தை எப்படி அழிக்க முடியும்? கம்பனைப் போல் சிறந்த கவியை கண்டதில்லை என்று கம்பனைப் போற்றினார். பாரதியார் முன்னெடுத்த ஆரிய எதிர்ப்பும், திராவிட மறுப்பும் இன்றைக்கு வளர்ந்து வருவது கண்கூடான உண்மையாகும்.


Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.